இலையுதிர்காலக் கவிதைகள்-1

புனைவரைவில் கட்டுற்ற கனங்களை

முடிச்சவிழ்க்கப் போய்

முரட்டுக்கயிறுகள் கிழிக்க ரணமாயின எனது விரல்கள்.

மிளிர்ந்தொளிரும் பிளாஸ்டிக்  பூக்களின்

நடிப்பைக் கிழிக்க நடுவில் கிடைக்கலாம்

மழை பெய்யப் புறப்படும்

என் மண்ணின் வாசனை.

மானசீகமாய் மனத்தில் புதைந்தழுத்தும் பிரபஞ்சம்

கவிதை எழுத எழுத்தாய் மாறி

உணர்வினுள் ஒளியும்.

இருத்தலின் சுமையிறக்க பேயாடுமிந்த இறைமை புகு தன்னிலை.

தன்னிலை தன்னை ஆட்டிப்படைக்க

திரும்பத் திரும்ப தொடங்கும் முடிவுகள்.

இருத்தலில் என்ன? நினைத்தலில் என்ன?

இல்லா உலகில் இலைகள் உதிர்ந்தன…

எனக்குப் பிடித்த கவிதைகள்-1

ஆத்மா நாம் கவிதைகள்

பழக்கம்

எனக்குக் கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக் கொண்டிருந்தேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்து கொண்ட சில மக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்தில் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா நடக்கிறேன்

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

மறுபடி மறுபடி

சொல்லச் சொல்ல

சொற்கள் மயங்கும்

எழுத எழுத

எழுத்து இறக்கும்

குழம்பும் மனதில்

எழுத்தும் சொல்லும்

குப்பைமேட்டில்

கிடக்கும் பொருட்கள்

வரிகள் ஆகும்

வார்த்தைகள் எல்லாம்

விளக்கும் தத்துவம்

தான் என்ன

காற்றில் இருக்கும்

வார்த்தைகள் எல்லாம்

காதில் சொல்லும்

ரகசியம் என்ன

குருவை சிஷ்யன்

மறுபடி மறுபடி

குருவின் உதட்டில்

மறுபடி மறுபடி

சிஷ்யன் மறைந்தான்

குருவாய் மாறி

-நன்றி: காகிதத்தில் ஒரு கோடு

ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

முனைவர் ஜேம்ஸ் ஹான்சன் இயற்பியல் ஆய்வாளர். நாஸா கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற ஆய்வகத்தின் இயக்குனர். இந்த அமைப்பு கோடா

ர்ட் விண்வெளி பயண மையம் என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி நிறுவனத்தின் (Earth Institute) அங்கமாகும். இவர் இருபதாண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 23, 1988) அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புவி வெப்பமடைகிறது என்று சாட்சியமளித்தன் மூலம் இப்பிரச்சினை குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்த்தவர்.

இவர் சென்ற ஜூன் மாதம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் விசேஷ குழுவின் முன் “இருபதாண்டுகளுக்குப்பின் புவி வெப்பமடைதல்: கவிழ் புள்ளிகளின் (Tipping Points) அருகாமையில்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டுகிறது. http://www.columbia.edu/~jeh1/2008/TwentyYearsLater_20080623.pdf

அவரது உரையிலிருந்து: “மீண்டும் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு தொடர்புடைய அறிவியல் சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்கள்-பொதுமக்களுக்குமிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்று போலவே இன்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எட்டப்படும் முடிவுகள், அரசியல் சமூகத்திற்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. இன்றும் இந்த முடிவுகள் 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக உறுதியானவை என்று என்னால் சான்று பகர முடியும் …பண்பாடுகள் தோன்றி வளர்ந்த இவ்வுலகென்ற படைப்பை காப்பாற்றுவதற்கு தேவையான மாற்றங்கள் என்னவென்பது தெளிவு. ஆனால் குறுகிய லாப நோக்கங்களைக் கொண்ட ஆதிக்க சக்திகள் வாஷிங்டனிலும், பிற தலைநகரங்களிலும் கோலோச்சுவதால் இம்மாற்றங்கள் நிகழாவண்ணம் தடுத்து வருகின்றன… எரிபொருள் கம்பெனிகளின் தலைவர்கள் (CEOS) தங்கள் வர்த்தக நடவடிக்கைகளின் நீண்ட கால விளைவுகளை நன்கறிந்துள்ளனர். என் பார்வையில் இவர்கள் மானுடத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றங்களுக்காக குற்றவாளிக் கூண்டிலேற்றப்படவேண்டும்.”

கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று Democracy Now என்ற செய்தி நிறுவனம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியது. ஜேம்ஸ் ஹான்ஸனின் பத்திரிகைக் குறிப்புகளை வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்ததும், அவரை ஊடகங்களில் உரையாட அனுமதிக்காததையும் குறித்த விவரங்களை ஹான்சனும், Censoring Science: Inside the Political Attack on Dr.James Hansen and the Truth of Global Warming என்ற நூலை எழுதியுள்ள மார்க் போவனும் (Mark Bowen) அந்த நேர்காணலில் விரிவாக பதிவு செய்துள்ளனர். http://www.democracynow.org/2008/3/21/

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என விட்டுவிட முடியாது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டதோ என்றுதான் அறிவியலாளர்கள் சிந்திக்கின்றனர். ஜான் ஹோல்ட்ரன் (John Holdren) என்ற விஞ்ஞானி புவி வெப்பமடைதல் என்று கூறுவதைவிட புவியை ஊறுசெய்தல் (Global Disruption) எனக்கூறுவதே பொருந்தும் என சென்ற வாரம் கூறியுள்ளார். ஜேம்ஸ் ஹான்சனின் உரை மற்றும் வேறு சில பதிவுகளிலிருந்து திரட்டிய சில தகவல்களை இங்கே தருகிறேன். அடிப்படை தகவல்களாக இருந்தாலும் என் போன்று இப்பிரச்சனைக்கு அறிமுகம் பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.
ஹான்ஸன் 2006ம் ஆண்டு மக்களின் கவனத்தை கவரும் வகையில் ஒரு அறிக்கையை முன் வைக்க வேண்டி, “விலங்கினங்கள் குறைந்து வருகின்றன: தாவரங்கள் இடம் பெயர்கின்றன” என்ற வாக்கியத்தை தனது ஆய்வு முடிவாக வெளியிட்டார்.

மனிதர்கள் வசதியாக வாழ்கின்ற காரணத்தால் (மேலைநாடுகளில்!) தினசரி ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களை அவர்கள் சரிவரக் கவனிப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலையை நம்பி மட்டுமே வாழக்கூடிய தாவரங்களும் விலங்கினங்களும் தற்போது பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

இப்புவி வெப்பமடைதல் எப்படி ஏற்படுகிறது? பூமி சூரிய கதிர்கள் மூலம் வெப்பமடைவதும் சமநிலையை பராமரிக்கும் வகையில் அதே அளவு வெப்பம் பூமியிலிருந்து வெளியேற்றப்படுவதும் இயற்கை. சூரிய ஓளி அதிகமாதல், எரிமலைக் குமுறல்கள் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஓரளவுக்கு வளிமண்டலத்துக்கு செல்லும் வெப்பத்தை அதிகரிக்கலாம். ஆனால், பெருமளவில் இந்த அதிகரிப்பு துருவப் பிரதேசங்களுக்குள் ஊடுவிச் செல்லும் வளிமண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன்- டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதனால்தான் ஏற்படுகிறதென்று பண்டைய நிலவியல் தட்பவெப்ப (paleo climatic/ past geolithical climatic) ஆய்வுகள் கூறுகின்றன. பூமியும் கடலும் அதிவெப்பமடைய இவையே காரணமென அந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

கிட்டத்தட்ட 943 வகை விலங்கினங்கள் தம் தகவமைப்பை மாற்றிக் கொண்டுள்ளன. துருவப்பிரதேசமான அண்டார்டிகாவில் அடிலி, எம்பரர் பென்குயின் போன்ற விலங்கினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் துருவக்கரடிகள் சீல்களை வேட்டையாட முடியாமல் போகவே இருபது சதவிகிததுக்கு மேல் குறைந்துவிட்டன. இவ்வுயிரனங்களின் இருப்பு மானுட இருப்புடன் தொடர்புடையது.

இம்மாற்றங்களுக்கு மூல காரணமாகிய கார்பன்- டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மூன்றில் ஒரு பங்கு விலங்கு மற்றும் தாவிர இனத்தையும் நம்மில் இலட்சக் கணக்கானவர்களையும் இழக்க நேரிடும். உலகெங்கும் வியாபித்துள்ள தொழில்மயமாதல் என்னும் பேய் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றை ஆக்கிரமித்துக் கொண்டமையால் லண்டன் நகரமே படிவத் திரவங்களின் புகையால் உழன்றது, அமெரிக்காவில் ஒரு ஆற்றையே தீக்கிரையாக்கியது, காடுகளை அமில மழையால் ஆழ்த்தியது. வெப்பமடைதல் பிரச்சினை நம்மை முற்றும் முழுவதும் பீதியிலாழ்த்தும் வரை நாம் இதற்கு விடை தேடப்போவதில்லை. ஆனால் நின்று, நிதானித்து சரிசெய்துவிடலாம் என்று நம்புவதற்கு இடமில்லாத ஒரு இக்கட்டான சூழலில் இன்று நாம் இருக்கிறோம். காரணம் 350ppm க்கு குறைவாக இருக்க வேண்டிய கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு ஏற்கனவே 385ppm ஆக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால் அது வருடத்திற்கு 2ppm அதிகரித்துக் கொண்டேபோய் தற்போது எஞ்சியுள்ள படிவத் திரவங்கள் (fossil fluids), எண்ணெய், கரி, கச்சாப் பொருட்களான தார்மணல், மீத்தேன் ஹைட்ரேட், கடின எண்னெய்கள் போன்ற எரிபொருள் முழுவதும் எரிவதால் எட்டக்கூடிய 450ppm அளவை விரைவில் அடைந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அல்லது 3.6 fahrenheit குறைப்பதுதான். அப்படி செய்வதன் மூலம் உடனடி நாசத்தை தவிர்க்கலாமே தவிர தீர்வை சென்றடைந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது.

ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வை நிறுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை தொழில் நிறுவன அதிபர்களின் கைக்கூலிகளாக இருக்கும் நமது அரசாங்கங்கள்தான். அதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு அளவிலடங்காதது. துந்திரப் பிரதேச தட்பவெப்ப மண்டலங்கள் ஏற்கனவே துருவங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இது கிட்டத்தட்ட 250 மைல்களை தாண்டிவிட்டது. தெற்கு அமெரிக்கா, பூமத்திய ரேகைப் பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளன. கார்பன்- டை ஆக்ஸைடு வளர்ச்சியை கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வராவிட்டால் காட்டுத்தீயும், ஏரிகள் வரண்டு போவதும் வழமையாகிவிடும். பனிமலைகளிலிருந்து வரும் நல்ல தண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இமயமலை, ஆண்டஸ், ராக்கி மலைத்தொடர்களின் நீராதாரங்கள் வற்றிக் கொண்டு வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எழும் ஹைட்ராலஜிக் சுழலால் வெள்ளங்களும் பஞ்சங்களும் அதிகரிக்கும். ஆழ்கடலிலுள்ள பவழப்பாறைகளும், மழைக்காடுகளும் மூன்றிலொரு பங்கு கடல் வாழ் விலங்கினங்களின் உரைவிடமாக விளங்குகின்றன. கார்பன்- டை ஆக்ஸைடு அதிகரிப்பால் கடல் நீருடன் அமில மழைக்கலப்பு ஏற்பட்டு இவை பழுதடைந்து வருகின்றன.

எங்கெல்லாம் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் கார்பனை தக்கவைத்து பூமிக்குள் திருப்பி அனுப்புவதன் மூலம் புவி வெப்பமடைவதை தவிர்க்கலாம். வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எண்ணெய்களிலிருந்து கார்பனை பிரித்தெடுப்பது கடினம். அதுமட்டுமல்லாது எண்ணெய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொடர்ந்து எரிபொருள் சக்தியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் இனி அது நிலக்கரியிலிருந்து எண்ணையை பிழிந்து எடுப்பதன் மூலமோ, படிவத் திரவங்களின் மூலமோ சாத்தியம் இல்லை. அவற்றின் முடிவை நாம் மிக விரைவில் சென்றடைய இருக்கிறோம். எண்ணெயின் விலை உயர இதுவும் ஒரு முக்கிய காரணம்.
மறு உற்பத்திக்குப் பயன்படக்கூடிய எரிபொருள் சக்தி மூலங்களை கண்டடைவதை விட்டு விட்டு எண்ணெய் நிறுவன ஜாம்பவான்கள் புவி வெப்பமடைவதைப் பற்றின ஐயப்பாட்டினை உண்டாக்குவது “புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு” என்று நமது சிகரட் பெட்டிகளின் மீது விளம்பரப்படுத்துவதை போன்றது. அரசியல் வாதிகளை அவர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்ட நிலையில் மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். கடைசி சொட்டு வரை நிலத்திலிருந்தும், கடலுக்குள்ளுமிருந்து படிவத் திரவத்தைப் பிழிந்தெடுக்கத் துடிக்கும் சுய நலம் பிடித்த இந்த வர்த்தக நிறுவங்களை குடிமக்களாகிய நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு அருகிலேயே நாம் உண்பதற்குத் தேவையான பயிர் விளையும்போதிலும் உலகின் மற்றொரு மூலையிலிருந்து அது கொண்டுவரப்படுகிறது. ரயில் வண்டியைவிடவும் விமானத்தில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிவிட்டது. விமான தளங்கள் நம் வெளியூர் பேருந்து நிலையங்களைக் காட்டிலும் அதிக வாகன நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இது பெரு முதலாளிகளுக்கு எளிதில், மலிவான விலையில் படிவத்திரவங்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான். கார்பன் வரியென்றும் கார்பனுக்கு 100% டிவிடெண்டும் விதிப்போமேயானால் அவர்கள் இப்போதையிலிருந்து தெளிவடைய வாய்ப்புண்டு. அதே நேரம் பொது மக்களாகிய நமக்கு அவர்கள் ஏற்படுத்தி வரும் நாசத்திற்கும் அவர்களை எவ்வாறு ஈடு செய்ய வைப்பதெப்படி என்று தெரியவில்லை.

ஹான்சனின் எச்சரிக்கைகள் இப்படியிருக்க இதனிடையில் கடந்த ஜூன் 22ம் தேதி ஜெடாவில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தியாளர் (Organisation of petroleum exporting companies)- வாடிக்கையாளர் கூட்டத்தில் நடந்த சூடான விவாதத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு காரணம் போதிய அளவு உற்பத்தி நாடுகள் ஏற்றுமதி செய்யாததுதான் என்று வாடிக்கையாளர்களான (பெரும்பாலும்) மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்ட மற்றொரு புறம் உற்பத்தியோ, நுகர்வோ பெரிய மாற்றமடையாதபோது போன வருடம் 70$ ஒரு பேரலாக இருந்த பெட்ரோல் இப்போது 140$ ஆக மாறக் காரணம் என்ன என்று பி.சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார். இந்த சர்ச்சையில் தெரிய வந்தது என்னவென்றால், பெட்ரோலியத்தில் முதலீடு செல்லும் பண முதலைகளுக்கும் அதன் உடனடி பயன்பாட்டுக்கும் எந்த உறவும் கிடையாது. அமெரிக்காவைச் சார்ந்த பெரிய நிதி நிறுவனங்கள், ஓய்வுப் பண வைப்பு நிதி நிறுவனங்கள், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் “எதிர்கால வர்த்தகம்” என்ற பெயரில் பெருவாரியான சரக்கை விலைபேசும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதென்பது ஒரு அசிங்கமான/கசப்பான உண்மை. உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது.

இழவு வீட்டில் பந்தலிலே பாவற்காய் என்று பாடுவது நினைவிற்கு வருகிறதல்லவா?

பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்

Thursday September 23, 2004

நன்றி: திண்ணை

கடந்த செப்டம்பர் 10ம் தேதி திண்ணை இதழில் வெளியான சி.மதிவாணனின் கட்டுரை என்னை எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியமையால், சில எண்ணங்கள்.

பெண்ணை/பெண்ணுடலை கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்புகளுக்குட்படுத்துவதுடன் பெண்ணை தெய்வமாகக் கருதுதல், ஆண்களுக்கு நிகராக மதியாமல் சிறப்பு சலுகைகளும் அங்கீகாரங்களையும் அளித்தல், அழகியல் கட்டுமானங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகப் பெண்ணை பாவித்தல் போன்ற பார்வைகளும்கூட பெண்களை ஒரு சாதாரண தளத்தில் இயங்கவிடாமல் தனிமைப்படுத்துவதற்கான (alienation) ஒரு உத்தியாகவே பார்க்க வேண்டும். ‘உங்களுடைய தங்கத்தாம்பாளங்கள் எங்களுக்கு வேண்டாம். அவற்றினுள் ஒளிந்துகொண்டிருக்கும் தூக்குக்கயிறுகளும் எங்களுக்கு வேண்டாம் ‘ என்பதே பெண்களின் அறைகூவலாக இருக்க முடியும்.

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் தன் வாழ்தலுக்கான சூழல்களையும், வழிமுறைகளையும் கட்டமைத்துக்கொள்வதற்கான வெளி (space) தேவை. ஒருவருக்கான வாழ்முறையை ஒருவர் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பொருளாதார, சுகாதார மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டி சரியாக சுவாசிப்பதற்கான ஒரு சுதந்திரம். மேற்கண்ட விஷயங்களுக்கு ஏற்றவாறு பெண்கள் கற்பு, தாய்மை என்று காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் நியதிகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் பாலியல் விடுதலைகோருவதற்கான சமூகச் சூழல் மட்டுமே ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலியல் சுதந்திரத்துடன் ஒரு விதத்தில் தொடர்புடைய பாலியல் தொழிலை சட்ட விரோதமாக்கி அத்தொழிலாளர்களை காவல்துறையின் ‘பரிபாலனத்திற்கு’ விடுவதும். பாலியல் தொழிலை நோய்   என்று சொல்வதும் தவறு. பாலியல் தொழிலை நோய் எனக்கொண்டால் ஆணாதிக்க   சமூகத்தை ஆலாலவிடமென்றல்லவா சொல்ல வேண்டும் ?

வழமைபோல மேலைநாடுகளை பெண்கள் விஷயத்துக்கு வழிகாட்டிகளாக எடுத்தாள விரும்பாவிட்டாலும் அங்குள்ள பொருளாதார மற்றும் பாலியல் சுதந்திரம் இந்தியாவிலும் மிகவும் தேவை. பாலியல் தொழிலாளர்களின்மீது செலுத்தப்படும் வன்முறையும் பாலியல் தொழிலை மற்ற தொழில்கள்போன்று எண்ணாமல் இழிவுபடுத்தும் கொடுமைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால், பாலியல் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள், அரசியல் வாதிகள், காவல்துறையினர் ஆகியவர்களின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி பாலியல் தொழிலை அரசாங்கம் அங்கீரித்துக் கொள்வதாகத்தான் இருக்கமுடியும். சரியான பாலியற்கல்விமுறை மூலமாகவும் அங்கீகரிக்கப் பட்ட (licensed) தொழில் நடைமுறைகளாலும் மட்டுமே ஏழ்மையாலும் பிறகாரணங்களாலும் இத்தகைய தொழிலுக்கு வரப்பட்ட பெண்கள் நசுக்கப்படுவதையும், பழிக்கப்படுவதையும் தடுத்து அவர்களுக்கான சுயமரியாதையை பராமரித்துக் கொள்ளமுடியும்.

நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களில் தெருப்போஸ்டர்களிலும் தினசரிகளிலும் பாலியல் தொழிலாளர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். இவர்கள் தங்களது தற்காப்புக்காக காவல்துறையை உண்மையாகவே துணைக்கு அழைக்கமுடியும். ஆனால் இந்தியாவிலோ அரசியல்வாதிகளும் காவல்துறையுமே இப்பெண்களை கைப்பாவையாக்குவதற்கான சூழ்நிலை நிலவிகிறது.

ஆதிகாலம் முதல் தொடர்ந்துவரும் இந்த நடப்புகளை திரும்பத்திரும்ப முளைக்கிள்ள முயற்சித்து அந்தச் சிறுபாண்மையினருக்கு கொடுமை இழைப்பதைவிட்டுவிட்டு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் அங்கீகாரமும் செய்து கொடுப்பதன் மூலம் நமக்குள் உடல்கள் குறித்து பதிய வைத்துக் கொண்டிருக்கும்/ பதியம் செய்யப் பட்டிருக்கும் பாரபட்சப் பார்வையை போக்கிக் கொள்ளலாம்.

செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்

பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ’(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார்.

மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல தன்னார்வக் குழுக்கள் தலையிட்டபோதும் நிலைமை இன்னமும் மாறாதபடியே உள்ளது. ஆர்.பி. கோயங்காவிற்கு சொந்தமான ‘ஹாரிஸன் மலையாளம் எஸ்டேட்’ எனும் ரப்பர் கம்பெனி 5000 குடும்பங்களின் விளைநிலத்தைக் கைப்பற்றிய வணிகச் சதியால் கடந்த 170 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த நிலையில் கம்பெனியின் ரப்பர் தோட்டங்களின் நடுவே அமர்ந்த வண்ணம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

புகைப்படக் கலைஞரிடம் சிறிது அரிசி கேட்டு நின்ற தாயார்(நன்றி: அஜிலால்)

இந்தியாவில் பெருமளவு சீர்திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன என அதன் நடுத்தர மக்களும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்கிப் பெருகும் கணிணித்துறை பெரு வணிகமும், துணை நகரங்களும், பொருளாதாரச் சிறப்பு நகரத் திட்டங்களும் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் தொடர்ந்து நிலவி வரும் சாதிப் பிரச்சினைகளால் தலித்துகள் மற்றும் ஆதிவாசி மக்கள் தங்கள் உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வரும் கொடுமைகள் நடந்தவண்ணமே உள்ளன. நில உச்சவரம்பு சட்டங்கள்(land ceiling acts) பெருந்தோட்டங்களின் மீது அமல்படுத்தப்படமாலிருப்பது இதற்கான முக்கிய காரணம் என்று கூறலாம்.

பிரித்தானியரின் வருகைக்கு முன் சுயதேவைகளுக்காக விளிம்பு நிலையினர் விவசாயத்திற்குப் பயன்படுத்திய காடுகளை சந்தைக்குத் தேவையான
பணப்பயிர்களான தேயிலை, ரப்பர் போன்றவைகளின் விளைநிலங்களாக மாற்றிது காலனிய அரசு. இந்தோனேசியா மற்றும் லத்தீன் அமெரிக்க காலனிகளில் ஐரோப்பியர் இவ்வாறே கரும்புப் பயிரிடலை மேற்கொண்டனர். காலனியாதிக்கத்திற்குப் பிறகு இந்நிலங்கள் பெருமுதலாளிகளின் கைக்கு மாற்றப்பட்டன. இன்றுவரை இப்பெருந்தோட்ட முதலாளிகள் தம் நில வரம்புகளை அதிகரித்து வருவதுடன் அங்கு வாழ்ந்துவரும் விளிம்புநிலை மக்களின் ‘புறம்போக்கு’ நிலங்களை அரசின் உதவியோடு ஆக்கிரமிப்பும் செய்து வருகின்றன.

‘மார்க்ஸிய’ அரசின் மாநிலங்களான கேரளாவும், மேற்கு வங்கமும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இதனைக் கவனத்திலெடுத்து பெரும்பாலான மாநிலங்களில் உழுபவர்களுக்கே நிலங்கள் சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. அதை மாநில அரசுகள் எவ்வாறு கையாண்டன என்பது வேறொரு கதை. 1967ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த தலித் மக்களுக்கு அறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்ட நிலங்களை அப்போதைய ஆட்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் அபகரித்து சொகுசு பங்களா கட்டியபோது தலித் மக்கள் அந்நிலங்களுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஜூலை 27 அன்று தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்தது. இவ்வழக்கு இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரும்பவும் 2006ம் ஆண்டு பிரித்தானியரால் தலித் மக்களுக்கென்று வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைத் திருப்பித் தருமாறு கேட்டு போராட்டங்கள் தொடங்கின.

தலித்துக்களுக்கு நில உரிமை அளிப்பதில் உள்ள பிரச்சினை என்ன? தனது ‘தகப்பன் கொடி’ நாவலில் பஞ்சமி நிலப் பிரச்சினையை முன் வைத்து எழுதிய அழகிய பெரியவன் கூறுகிறார், “தலித்துகள் இம்மண்ணின் தொல்குடிகள். அவர்கள் இந்நிலத்தின் தொன்ம உரிமையாளர்கள். அவர்களை நிலமற்றவர்களாகவும், எப்போதும் கூலிக்காக கையேந்தும் உழைப்பாளிகளாகவும் ஆக்கியவர்கள் சாதி இந்துக்கள். அவர்களால் ஏற்படுத்தப்படும் அரசுகள் இதில் அக்கறை செலுத்துவதில்லை”( தலித் முரசு, பிப்ரவரி15, 2007) .

இச்சாதி இந்துக்கள் பார்ப்பனர்களானாலும் ஆதிக்கசாதி இந்துக்களானாலும் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படும் அரசாங்கங்களில் இம்மக்களுக்கு அளிக்கப்படும் அநீதி தொடர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் தலித்துகளின் குரலாக ஒலித்தவரும் புரட்சிகர மாற்றங்களை செய்து காட்டியவருமான அய்யங்காளி உருவாக்கிச் சென்ற ‘சாது ஜன சம்யுக்த வேதி’(SJVSV) என்ற அமைப்பின் வாயிலாக அவர் கற்றுத்தந்த நில உரிமைப் போராட்டத்தைக் கடைபிடித்து வருகிறார்கள் செங்கராவினர். 1930களில் தலித் பெண்கள் இடுப்புக்கு மேல் உடையணியக் கூடாது என்பதை எதிர்த்து வெற்றி கண்டவர் அய்யங்காளி. தலித்துக்களிடையே நில உரிமை, கல்வியுரிமை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மண்ணில் இடது சாரிகளின் ஆட்சியால் தலித்துகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுவதை பொய்ப்பிக்கிறது இப்போராட்டம்.

1996ம் ஆண்டிலேயே ஒப்பந்த முடிவு பெற்றுவிட்ட நிலத்தை ஆக்கிரமிப்பதுடன் பட்டா இல்லாத 1048 ஏக்கர் நிலங்களையும் சுற்றி வளைத்துள்ளது ‘ஹாரிஸன் மலையாளம் கம்பனி’. அவர்களது ஆக்கிரமிப்பு கிட்டத்தட்ட 6000 ஹெக்டேக்கர்களைத் தாண்டிவிட்டது என்றும் தரப்புக்கள் கூற ப்படுகிறது.

SJVSVயின் தகவலின்படி கேரளத்தில் நிலமில்லாதவர்களில் 85% த்தினர் பல தலைமுறைகளாகப் பொருளாதாரம், அதிகாரம், சொத்துரிமை மறுப்புகளுக்கு ஆளான தலித்துக்களும் ஆதிவாசிகளுமாவர். கிட்டத்தட்ட 12,500 தலித் காலனிகளாகவும் 4083 ஆதிவாசிக் காலனிகளாகவும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் மறுப்பிற்கு நடுவே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1970 ஆண்டு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்தச் சட்டம் குத்தகைதாரர்களுக்கே நிலம் சொந்தம் என்று அறிவித்திருந்தபோதும் தாழ்த்தப்பட்ட சாதியினர் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பது சாத்தியமில்லாத காரணத்தால் அடிநிலை தொழில்களுக்கு ஆட்படுத்தப்பட்ட இவர்கள் மீண்டும் நில உரிமையை இழக்க நேரிட்டது.

தற்போதைய சூழலில் பொதுமக்களின் நலனுக்காக அவர்களின் வேலை வாய்ப்புக்காகவும் நல் வாழ்வுக்காகவும் என்று சொல்லிக் கொண்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளில் ஒன்று நில ஆக்கிரமிப்பு. 1966ம் ஆண்டு 10இலட்சம் ஏக்கர் பட்டுவாடாவில் இருக்கிறதென்று கேரள அரசின் தகவல்கள் கூறுகையில் மூன்று அல்லது நான்கு இலட்சம் ஏக்கர்கள் மட்டுமே மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த நிலைமையில் ‘டாடா’வின் கம்பெனிக்கு கேரள அரசு 1,43,000 ஏக்கரை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. தலித்துக்களுக்கு தரப்பட வேண்டிய குறைந்த அளவு கவுரவமும் மறுக்கப்பட்டு 1990 ஆண்டு அவர்கள் தங்கள் சமூகத்தில் இறந்தவர்களின் சடலத்தை தாங்களே தங்கள் வீட்டுக்குள் புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நில உரிமைக்கான போராட்ட்த்தின் முதல் கட்டம் இங்கு தொடங்கியது. இக்குரல்களை அடக்குவதற்காக அவர்களது பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டதாக போலி ஆவணங்களைத் தயார் செய்தது கேரள அரசாங்கம் (ஆதாரம்:http://www.thesouthasian.org/archives/2007/chengara_land_struggle_in_kera.html).
கடந்த ஆகஸ்டு ஏழாம் தேதி முதல் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறைந்தது 24,000 பேர் பல்வேறு இடங்களிலிருந்து வந்து டெண்டு கொட்டகைகளிலும் பிளாஸ்டிக் தாள்களிலும் உறங்கி எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் “உபயோகப்படுத்தப்படாத ரப்பர் தோட்டத்தை ஆக்கிரமிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற இம்மக்களால் கம்பெனியின் ரப்பர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது, இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நக்ஸல்பாரிகள்” என்றெல்லாம் பல்வேறு வதந்திகளைப் பத்திரிக்கைகள் பரப்பிவருகின்றன. இம்மக்கள் பல்வேறு ‘மார்க்ஸிய’ அமைப்புகளால் தொல்லைக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். போராடும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். (http://www.youtube.com/watch?v=NvI_JUCwttw)
11 வயது சிறுமி ஒருத்தி போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே நான் பள்ளிக்குத் திரும்புவேன் என்று கூறியிருக்கிறாள்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சி.பி.எம் தலைவரான பிரகாஷ் காரத்திடம் உதவி கேட்டுள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள சி.பி.எம் அலுவலகம் முன் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து சென்ற பிறகு அந்த இடத்தை அலுவலகத்தினர் தண்ணீரிட்டு சுத்தம் செய்ததாக எழும் தகவல்கள் நம் மனதை நோகடிக்கச் செய்கின்றன. இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசாங்கத்திடம் இதுபற்றி முறையிட்டுள்ள SJVSV இது கத்தியின்றி ரத்தமின்றி நடக்கப்படவேண்டிய போராட்டம் இதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் இவர்களுக்கு உரிய நிலங்களைப் பெற்றுத் தாருங்கள் என்று அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

1946ம் ஆண்டு நவம்பர் இருபத்தியிரண்டாம் தேதி கேரளத்தின் கரிவல்லூர் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க முயன்ற அரசரை எதிர்த்த கம்யூனிஸ்டு போராளிகளைப் பிரித்தானிய அரசாங்கம் தனது துப்பாக்கிகளால் வீழ்த்தியதாகச் சொல்கிறது சரித்திரம். இன்று அதே கம்யூனிஸ்டு அரசாங்கத்திடம் செங்கல் சூளைகளால் தமது விளைநிலத்திற்கு ஆபத்து விளைவதால் அவர்களை விலகிப்போகச் சொல்லி போராடி வருகிறது எரையாம்குடி விவசாயச் சமூகம். சட்டத்துக்குப் புறம்பான பாக்ஸைட்டு சுரங்கத்திற்கெதிரான போராட்டம் காஸர்கோட்டில் இன்னும் நடந்து வருகிறது.

பிளாச்சிமடாவில் கோகோ-கோலாவிற்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு மாம்பழச் சாற்றினை புட்டிகளிலடைக்கும் இடமாக இது மாறியுள்ளது. காஸர்கோட்டில் எண்டோசல்பான் என்னும் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பிறகு அந்த நிறுவனம் தடை செய்யப்பட்டுவிட்டது. செங்கரா போராட்டத்திற்கும் ஒரு நல்ல முடிவு வருமானால் சிவப்பு மாநிலம் தனது கெளரவத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்புண்டு.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று கையெழுத்திடலாம்.

http://www.petitiononline.com/chengara/petition.html

நன்றி: சத்தியக் கடதாசி

தேசியம் தேடும் உடலும் அடையாளமும்

கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக இந்த நியூயார்க் நகரின் குளிரின் நடுவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் வேலைகளை நான் கண்காணித்து வருகிறேன். அவ்வப்போது பெய்யும் பனி, பேய்க்காற்று, ரத்தத்தை உறையச் செய்யும் பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலை இவற்றிடையில் தொடந்து தங்களது வேலைகளை துரிதமாக செய்து கொண்டிருக்கும் வேலையாட்களை பார்க்கையில் ஒருபுறம் பரிதாபமும் மறுபுறம் அவர்கள் பயன்படுத்திய தூக்கிகள் போன்ற இயந்திரங்களைக் கண்டு வியப்பும் மேலிட்டது. இரண்டு நாட்களுக்கொரு மாடி என கிட்டத்தட்ட முப்பது நாட்களில் என் கண்முன்னே ஒரு பல அடுக்கு மாடி கட்டப்பட்டுவிட்டது. இன்று காலை தேனீர் அருந்துவதற்கு முன் அதன் முன் சென்று பார்த்தேன் அதன்மேல் ஒரு அமெரிக்கத் தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது.

அடையாளங்களின் உருவாக்கம் என்பது அரசியல், ஆதிக்கவர்க்கத்திலிருந்து உருவாக்கப்படுகிறதென்ற தோற்றம் ஒருபுறம் இருக்கையில் இத்தகைய அடையாளங்களில் தன்னை புகுத்திக்கொள்வதற்கான எத்தனிப்பு சாதாரண மக்களுக்கும், விளிம்புநிலையினருக்கும் ஏற்படுவதென்பதுதான் இதில் உள்ள நகை முரண். கடந்த ஒரு வருட காலமாகவே கட்டிடம் கட்டப்பயன்படுத்தப்படும் தூக்கிகள் பழுதடையும் காரணத்தால் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலானோர் நியூயார்க் நகரத்தில் மட்டுமே விபத்துக்குள்ளாகி உயிர்துறந்துள்ளனர். அவர்களுக்கான தொழிலாளர் அமைப்புக்களில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான வர்க்கங்களிலிருந்து வருபவர்களிடம் குறைந்த சலுகைகளுடன் அதிக வேலைப்பளுவை சுமத்தும் உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. எனினும், தேசியம் என்னும் சக்தியின் ஊடுறுவல் சமூகத்தின் எல்லா நிலைகளையும் சென்றடையக் காரணம் என்ன? இக்காரணங்களால் அவர்கள் துய்க்கும் பலன் யாது?

அடையாளங்களைச் சென்றடைதல் என்பது ஆதிக்கத்தின் பக்கம் செயல்லடுகையில் பல்வேறு இன, சாதி, பால், மொழிக் குழுக்களை ஒரு அடையாளக் குடையின் கீழ் கொண்டு சேர்ப்பதில் விரிகிறது.  மற்றொரு பக்கம் விளிம்புநிலைப் பிரஜைகள், பெண்கள், வேற்று மொழி/இனத்தைச் சார்ந்தவர்களும் இந்த தேசிய அடையாளத்தினுள் புகுவதற்கான எத்தனிப்பையும் தேவையையும் பெருந்தேசிய அடையாளங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.  அதேசமயம் தங்கள் நம்பிக்கைகள், சுய மரியாதை, உரிமைகள், கலாச்சார அடையாளங்கள் போன்றவற்றிற்கு களங்கம் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியங்கள் விளிம்பு நிலையினரைக் கேள்விக்குள்ளாகின்றன.

(தொடரும்)

வரலாறு எழுதுதல்

வரலாறு, வரலாறு எழுதுதல் என்பவை தொன்று தொட்ட காலமாகவே இருந்து வருகின்றனவா? வரலாறு எழுத்து வடிவம் பெறுவதற்கு முன் நமது பேச்சுவழி கலாச்சாரங்களில் இருந்தமை நாட்டாற்கலைகள் மூலமாகவும், கல்வெட்டுக்கள் மூலமாகவும் இதர பல இசை நாடகங்கள், பாடல் மற்றும் ஓவியங்களின் வழி கண்டறியப்படலாம். குகைகளில் வாழ்ந்த காலம் முதலாகவே மனிதன் தனது தினசரி நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் ஆகியவற்றை குகைகளில் தீட்டத்தொடங்கிவிட்டான். அப்படி இருக்கையில் மனிதர்கள் தன் வரலாறு கூறுதல் என்ற அளவிலேயே அது கூறப்படும் மொழி, இடம், காலம், ஊடகம் என்ற அளவில் தான் கூறவந்ததை முற்றிலும் மற்றவர்களுக்கு சென்றடையுமாறு கூறிவிட்டானா என்பதில் ஐயங்கள் பல.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கிய நிகழ்வாக எழுந்த இந்த வரலாறு எழுதுதல் தன் வரலாற்றை மற்றுமல்லாது பிறர் வரலாறுகளையும் நிறுவ முயன்றதுடன் பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற சமூக காரணிகளையும் அவற்றிற்குரிய அளவுகோல்கள் பிறப்பிடங்கள் பற்றி மேற்கத்திய கலாச்சாரங்களுக்கு பாரபட்சமாகவே விரிக்கத்தலைபட்டது அனைவரும் அறிந்த உண்மை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கலாச்சார ரீதியில் முன் தங்கியிருந்த எகிப்தை பின்னோக்கி தள்ளிவிட்டு கிரேக்கத்தை உலகக் கலாச்சார மையெமென நிறுவியது மேற்கத்திய வரலாற்றின் சாதனை வரலாற்றியலாளர் மார்டின் பெர்னல் தனது கறுப்பு எதீனா என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். கலையின் கதை என்ற மிகவும் பிரபலமான தனது நூலில் காந்தாரக் கலைக்கு அரை பக்கம் ஒதுக்கிய ஈ.ஹெச். காம்ப்ரிச் இந்தியக் கலைமரபைப் பற்றி அதில் ஒன்றுமே குறிப்பிடுவதில்லை. ஆனால், இந்நூல் இன்று வரை உலகக் கலை வரலாற்றைப் பறைசாற்றுகின்ற நூலாக எல்லா பல்கலைக்கழகங்களிலும் படிக்கப்பட்டு வருகிறது.

அறிவுத்துறையை கையிலெடுத்திருக்கும் இன்றைய நவீன நிறுவனமான கல்வித்துறையின் அணுகுமுறைகளை கட்டுடைப்பு செய்தவர் தத்துவ ஞானி மிசேல் ஃபூக்கோ. அறிவுத்துறையை பல்வேறு பகுதிகளாக (உ.தா: வரலாறு, மருத்துவம், இலக்கியம், மானுடவியல், பொருளாதாரம், அரசியல்) பிரிப்பதையே பிரச்சினையாகப் பார்க்கிறார் அவர். தனது “பொருட்களின் அமைவு” (Order of things) என்ற புத்தகத்தில் போர்கேசை மேற்கோள் காட்டி ஒரு சீனப் பொருளடக்கத்தில் ஒன்றுபோலிருப்பதையும் வேறுபட்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தவிப்பில் ஏற்படுத்தப்பட்ட வகைப்படுத்தலை அவர் சுட்டிக்காட்டுகிறார்:விலங்குகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:அ) அரசருக்குச் சொந்தமானவை, ஆ) இறந்தபின் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டியவை, இ) பயந்தவை, ஈ) பன்றிகள், உ) மாலுமிகளை தங்கள் பாடல்களால் திசை திருப்பும் பாதி மனித இனம், ஊ) அற்புதமானவை, எ) தெரு நாய்கள், ஏ) இந்த வகைப்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளவை, ஐ) மிகவும் உணர்ச்சி வசப்படுபவை, ஒ) எண்ணிலடங்காதவை, ஓ) ஒட்டகங்களின் அருமையான நுண்ணிய முடிகளால் வரையப்பட்டவை, ஒள) மற்றும் பல, ஃ) சமீபத்தில் தண்ணீர் குடுவையை உடைத்தவை, அ அ) ஈக்களிலிருந்து மிகவும் மாறுபட்டவை. இந்த வகைப்படுத்தலின் விசித்திரம் என்னவென்றால் முற்றிலும் மற்றொரு சிந்தனை முறைக்குறிய புனைவுகளைக் கொண்ட இவை நமது புரிதலுக்கு மிகவும் அப்பாற்பட்டு இருப்பதுதான்.

(தொடரும்)

ஆறு கவிதைகள்

இரைதேடி

வான் விழுங்கி

வயிற்றில் நெருப்பாக்கி

கடல் விழுங்கி

கிணற்று நீராக்கி

கண்ணீரின் உப்பையுண்டு

காடுவிளைவித்த பூமி

வெண்ணீரைக் கொட்டி

விரல் நீட்டியது.

இன்னும் பசி இன்னும் பசியென.

இடுக்கிடுக்கே வாய் பிளந்து

இறையை, மனிதரை

உண்டுப்பெருத்தது.

பெண்ணென்பார் பூமியை..

பொறுத்த பின்னர்

வெடிக்கத்தான் வேண்டும்.

-2002 குஜராத் சம்பவத்திற்குப் பிறகு

நன்றி: பறத்தல் அதன் சுதந்திரம்

வழியை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள்

கள்ளுண்டவளானேன் நான்.

கனக்குது இதயம்.

கைக்கெட்டாமல் போன

வானத்தினடியில்

கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கும்

இந்த கிழட்டு மரக்குயில்கள் கண்டு

“சொர்க்கத்துக் குயில்கள்

நீயின்றி அமைதி காக்கின்றன’

என்று பிரெஞ்சுப் பழமொழி

பேசுகிறாள் தோழி.

சொர்க்கத்தைத் தேட வேரோடிப்போன

இந்த வழியில்தான்

காணாமற்போனது கானகம்.

மனது நிறைய கானகம் கொண்டு

வழி மறந்தேன் நான்.

மாற்றி வைத்த வழிகளினிடையே

கவிதை பேசப்போய்,

கனக்குது இதயம்

காக்கையின் எச்சமாய்.

இனியும் எத்தனை நாட்கள்

இன்னமும் எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

இறுகி வளர்ந்த இந் நாகரிகப் பாறை

உடையப் பெருகும் மானிட ஊற்றென.

எரிந்து மடியும் வீட்டின் சாம்பலும்

எடுத்தெரியப்பட்ட வயிற்றுச் சிசுவும்.

சாதித் தீயின் சாத்தியம் வளர

ஆதியும் அந்தமும் ஆடிப்போனேன்.

இனியொரு முறை நான்

இறக்க வேண்டாம்.

எனில் இனி எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

– குஜராத் 2002 இனப்படுகொலையின் பிறகு

காதல் கொண்டு செல்

களம் பெரியது.

கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.

நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட

மொட்டை மாடியென

நினைவு பொய்யில்லை.

நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்

பருத்துக் கிடக்கும்

கனவும் அப்படித்தான்.

நினைவுகள் கனவுண்டு

நகருகையில் நீண்டு நீண்டு

நெருங்க முடியாமல் ஓடும்

நாட்குறிப்பு.

குறித்து வைக்க நாளா இல்லை?

கொண்டுவா பார்ப்போம் எனக்கூற..

களம் விரியும்

கனவு போல். கனவினுள் புகும் காற்று போல்.

நினைவுகள் பெரிதாகிக் கொண்டு போகும்,

பின்னர் நாட்குறிப்பை கிழித்துக் கொண்டு கொட்டும்.

வருகின்ற நாட்கள் முட்டித் தலை சாய்க்க

கடந்ததன் நகமாய் காலம் பிடித்துந்த

கழிவிறக்கம் கொண்டு சொல்லும்

“காதல் கொண்டு செல்” என.

அழகிகள் உறங்கும் நகரம்

இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்

தோன்றிற்று இந்த அலமாரி.

கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்

தோன்றின புத்தகங்கள்.

வார்த்தைகளும் விஷயங்களும் தாண்டி

வடிவமுற்று வியாபித்த செவ்வகங்கள்.

புதியவற்றின் வாசனை

பழையன கொண்ட பூச்சி வாசம்.

அட்டை கிழிந்து தொங்கும் அழகு.

நூலகத்திலிருந்து தப்பிவந்தவை,

நண்பர்களிடம் திருப்பித்தராதவையென

நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்

எனது அலமாரி,

அழகிகள் உறங்கும் நகரம் என.

நீ

முகச்சவரம் செய்ய ரசம் போன கண்ணாடி

முட்டியைத் தொட்டிராத அரைக்கால் சராயின்

பாக்குக் கறை

போட்டுப் பிய்ந்த பெல்டின் முனைக் கம்பி

குதிக்கால் ஓட்டையான “கோவார்டிஸ்” செருப்பு

என நீ மனமுடைவது வெளிதெரிந்தாலும்

தீட்டுத் துணிக்கும் தினம்போடும் உள்ளாடைக்கும்

ஆத்தாவைக் கேட்டால் அது திட்டும்,

நீ வேலைக்குப் போகும் பையன்.

கண்ணாடி வளவியும் கலர் ரிப்பனும்

பத்து ரூபாய் கொலுசும் பழசாகிப் போக

பாவாடை தாவணியும்

பவுன் நகையும் தேடப்போய்

பெரிய மனுசனானாய் நீ.

பானை துலக்கலானேன் நான்.