ஆறு கவிதைகள்

இரைதேடி

வான் விழுங்கி

வயிற்றில் நெருப்பாக்கி

கடல் விழுங்கி

கிணற்று நீராக்கி

கண்ணீரின் உப்பையுண்டு

காடுவிளைவித்த பூமி

வெண்ணீரைக் கொட்டி

விரல் நீட்டியது.

இன்னும் பசி இன்னும் பசியென.

இடுக்கிடுக்கே வாய் பிளந்து

இறையை, மனிதரை

உண்டுப்பெருத்தது.

பெண்ணென்பார் பூமியை..

பொறுத்த பின்னர்

வெடிக்கத்தான் வேண்டும்.

-2002 குஜராத் சம்பவத்திற்குப் பிறகு

நன்றி: பறத்தல் அதன் சுதந்திரம்

வழியை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள்

கள்ளுண்டவளானேன் நான்.

கனக்குது இதயம்.

கைக்கெட்டாமல் போன

வானத்தினடியில்

கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கும்

இந்த கிழட்டு மரக்குயில்கள் கண்டு

“சொர்க்கத்துக் குயில்கள்

நீயின்றி அமைதி காக்கின்றன’

என்று பிரெஞ்சுப் பழமொழி

பேசுகிறாள் தோழி.

சொர்க்கத்தைத் தேட வேரோடிப்போன

இந்த வழியில்தான்

காணாமற்போனது கானகம்.

மனது நிறைய கானகம் கொண்டு

வழி மறந்தேன் நான்.

மாற்றி வைத்த வழிகளினிடையே

கவிதை பேசப்போய்,

கனக்குது இதயம்

காக்கையின் எச்சமாய்.

இனியும் எத்தனை நாட்கள்

இன்னமும் எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

இறுகி வளர்ந்த இந் நாகரிகப் பாறை

உடையப் பெருகும் மானிட ஊற்றென.

எரிந்து மடியும் வீட்டின் சாம்பலும்

எடுத்தெரியப்பட்ட வயிற்றுச் சிசுவும்.

சாதித் தீயின் சாத்தியம் வளர

ஆதியும் அந்தமும் ஆடிப்போனேன்.

இனியொரு முறை நான்

இறக்க வேண்டாம்.

எனில் இனி எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

– குஜராத் 2002 இனப்படுகொலையின் பிறகு

காதல் கொண்டு செல்

களம் பெரியது.

கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.

நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட

மொட்டை மாடியென

நினைவு பொய்யில்லை.

நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்

பருத்துக் கிடக்கும்

கனவும் அப்படித்தான்.

நினைவுகள் கனவுண்டு

நகருகையில் நீண்டு நீண்டு

நெருங்க முடியாமல் ஓடும்

நாட்குறிப்பு.

குறித்து வைக்க நாளா இல்லை?

கொண்டுவா பார்ப்போம் எனக்கூற..

களம் விரியும்

கனவு போல். கனவினுள் புகும் காற்று போல்.

நினைவுகள் பெரிதாகிக் கொண்டு போகும்,

பின்னர் நாட்குறிப்பை கிழித்துக் கொண்டு கொட்டும்.

வருகின்ற நாட்கள் முட்டித் தலை சாய்க்க

கடந்ததன் நகமாய் காலம் பிடித்துந்த

கழிவிறக்கம் கொண்டு சொல்லும்

“காதல் கொண்டு செல்” என.

அழகிகள் உறங்கும் நகரம்

இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்

தோன்றிற்று இந்த அலமாரி.

கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்

தோன்றின புத்தகங்கள்.

வார்த்தைகளும் விஷயங்களும் தாண்டி

வடிவமுற்று வியாபித்த செவ்வகங்கள்.

புதியவற்றின் வாசனை

பழையன கொண்ட பூச்சி வாசம்.

அட்டை கிழிந்து தொங்கும் அழகு.

நூலகத்திலிருந்து தப்பிவந்தவை,

நண்பர்களிடம் திருப்பித்தராதவையென

நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்

எனது அலமாரி,

அழகிகள் உறங்கும் நகரம் என.

நீ

முகச்சவரம் செய்ய ரசம் போன கண்ணாடி

முட்டியைத் தொட்டிராத அரைக்கால் சராயின்

பாக்குக் கறை

போட்டுப் பிய்ந்த பெல்டின் முனைக் கம்பி

குதிக்கால் ஓட்டையான “கோவார்டிஸ்” செருப்பு

என நீ மனமுடைவது வெளிதெரிந்தாலும்

தீட்டுத் துணிக்கும் தினம்போடும் உள்ளாடைக்கும்

ஆத்தாவைக் கேட்டால் அது திட்டும்,

நீ வேலைக்குப் போகும் பையன்.

கண்ணாடி வளவியும் கலர் ரிப்பனும்

பத்து ரூபாய் கொலுசும் பழசாகிப் போக

பாவாடை தாவணியும்

பவுன் நகையும் தேடப்போய்

பெரிய மனுசனானாய் நீ.

பானை துலக்கலானேன் நான்.

பின்னூட்டமொன்றை இடுக

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s