இலையுதிர்காலக் கவிதைகள்-1

புனைவரைவில் கட்டுற்ற கனங்களை

முடிச்சவிழ்க்கப் போய்

முரட்டுக்கயிறுகள் கிழிக்க ரணமாயின எனது விரல்கள்.

மிளிர்ந்தொளிரும் பிளாஸ்டிக்  பூக்களின்

நடிப்பைக் கிழிக்க நடுவில் கிடைக்கலாம்

மழை பெய்யப் புறப்படும்

என் மண்ணின் வாசனை.

மானசீகமாய் மனத்தில் புதைந்தழுத்தும் பிரபஞ்சம்

கவிதை எழுத எழுத்தாய் மாறி

உணர்வினுள் ஒளியும்.

இருத்தலின் சுமையிறக்க பேயாடுமிந்த இறைமை புகு தன்னிலை.

தன்னிலை தன்னை ஆட்டிப்படைக்க

திரும்பத் திரும்ப தொடங்கும் முடிவுகள்.

இருத்தலில் என்ன? நினைத்தலில் என்ன?

இல்லா உலகில் இலைகள் உதிர்ந்தன…