ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

முனைவர் ஜேம்ஸ் ஹான்சன் இயற்பியல் ஆய்வாளர். நாஸா கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற ஆய்வகத்தின் இயக்குனர். இந்த அமைப்பு கோடா

ர்ட் விண்வெளி பயண மையம் என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி நிறுவனத்தின் (Earth Institute) அங்கமாகும். இவர் இருபதாண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 23, 1988) அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புவி வெப்பமடைகிறது என்று சாட்சியமளித்தன் மூலம் இப்பிரச்சினை குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்த்தவர்.

இவர் சென்ற ஜூன் மாதம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் விசேஷ குழுவின் முன் “இருபதாண்டுகளுக்குப்பின் புவி வெப்பமடைதல்: கவிழ் புள்ளிகளின் (Tipping Points) அருகாமையில்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டுகிறது. http://www.columbia.edu/~jeh1/2008/TwentyYearsLater_20080623.pdf

அவரது உரையிலிருந்து: “மீண்டும் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு தொடர்புடைய அறிவியல் சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்கள்-பொதுமக்களுக்குமிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்று போலவே இன்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எட்டப்படும் முடிவுகள், அரசியல் சமூகத்திற்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. இன்றும் இந்த முடிவுகள் 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக உறுதியானவை என்று என்னால் சான்று பகர முடியும் …பண்பாடுகள் தோன்றி வளர்ந்த இவ்வுலகென்ற படைப்பை காப்பாற்றுவதற்கு தேவையான மாற்றங்கள் என்னவென்பது தெளிவு. ஆனால் குறுகிய லாப நோக்கங்களைக் கொண்ட ஆதிக்க சக்திகள் வாஷிங்டனிலும், பிற தலைநகரங்களிலும் கோலோச்சுவதால் இம்மாற்றங்கள் நிகழாவண்ணம் தடுத்து வருகின்றன… எரிபொருள் கம்பெனிகளின் தலைவர்கள் (CEOS) தங்கள் வர்த்தக நடவடிக்கைகளின் நீண்ட கால விளைவுகளை நன்கறிந்துள்ளனர். என் பார்வையில் இவர்கள் மானுடத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றங்களுக்காக குற்றவாளிக் கூண்டிலேற்றப்படவேண்டும்.”

கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று Democracy Now என்ற செய்தி நிறுவனம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியது. ஜேம்ஸ் ஹான்ஸனின் பத்திரிகைக் குறிப்புகளை வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்ததும், அவரை ஊடகங்களில் உரையாட அனுமதிக்காததையும் குறித்த விவரங்களை ஹான்சனும், Censoring Science: Inside the Political Attack on Dr.James Hansen and the Truth of Global Warming என்ற நூலை எழுதியுள்ள மார்க் போவனும் (Mark Bowen) அந்த நேர்காணலில் விரிவாக பதிவு செய்துள்ளனர். http://www.democracynow.org/2008/3/21/

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என விட்டுவிட முடியாது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டதோ என்றுதான் அறிவியலாளர்கள் சிந்திக்கின்றனர். ஜான் ஹோல்ட்ரன் (John Holdren) என்ற விஞ்ஞானி புவி வெப்பமடைதல் என்று கூறுவதைவிட புவியை ஊறுசெய்தல் (Global Disruption) எனக்கூறுவதே பொருந்தும் என சென்ற வாரம் கூறியுள்ளார். ஜேம்ஸ் ஹான்சனின் உரை மற்றும் வேறு சில பதிவுகளிலிருந்து திரட்டிய சில தகவல்களை இங்கே தருகிறேன். அடிப்படை தகவல்களாக இருந்தாலும் என் போன்று இப்பிரச்சனைக்கு அறிமுகம் பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.
ஹான்ஸன் 2006ம் ஆண்டு மக்களின் கவனத்தை கவரும் வகையில் ஒரு அறிக்கையை முன் வைக்க வேண்டி, “விலங்கினங்கள் குறைந்து வருகின்றன: தாவரங்கள் இடம் பெயர்கின்றன” என்ற வாக்கியத்தை தனது ஆய்வு முடிவாக வெளியிட்டார்.

மனிதர்கள் வசதியாக வாழ்கின்ற காரணத்தால் (மேலைநாடுகளில்!) தினசரி ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களை அவர்கள் சரிவரக் கவனிப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலையை நம்பி மட்டுமே வாழக்கூடிய தாவரங்களும் விலங்கினங்களும் தற்போது பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

இப்புவி வெப்பமடைதல் எப்படி ஏற்படுகிறது? பூமி சூரிய கதிர்கள் மூலம் வெப்பமடைவதும் சமநிலையை பராமரிக்கும் வகையில் அதே அளவு வெப்பம் பூமியிலிருந்து வெளியேற்றப்படுவதும் இயற்கை. சூரிய ஓளி அதிகமாதல், எரிமலைக் குமுறல்கள் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஓரளவுக்கு வளிமண்டலத்துக்கு செல்லும் வெப்பத்தை அதிகரிக்கலாம். ஆனால், பெருமளவில் இந்த அதிகரிப்பு துருவப் பிரதேசங்களுக்குள் ஊடுவிச் செல்லும் வளிமண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன்- டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதனால்தான் ஏற்படுகிறதென்று பண்டைய நிலவியல் தட்பவெப்ப (paleo climatic/ past geolithical climatic) ஆய்வுகள் கூறுகின்றன. பூமியும் கடலும் அதிவெப்பமடைய இவையே காரணமென அந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

கிட்டத்தட்ட 943 வகை விலங்கினங்கள் தம் தகவமைப்பை மாற்றிக் கொண்டுள்ளன. துருவப்பிரதேசமான அண்டார்டிகாவில் அடிலி, எம்பரர் பென்குயின் போன்ற விலங்கினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் துருவக்கரடிகள் சீல்களை வேட்டையாட முடியாமல் போகவே இருபது சதவிகிததுக்கு மேல் குறைந்துவிட்டன. இவ்வுயிரனங்களின் இருப்பு மானுட இருப்புடன் தொடர்புடையது.

இம்மாற்றங்களுக்கு மூல காரணமாகிய கார்பன்- டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மூன்றில் ஒரு பங்கு விலங்கு மற்றும் தாவிர இனத்தையும் நம்மில் இலட்சக் கணக்கானவர்களையும் இழக்க நேரிடும். உலகெங்கும் வியாபித்துள்ள தொழில்மயமாதல் என்னும் பேய் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றை ஆக்கிரமித்துக் கொண்டமையால் லண்டன் நகரமே படிவத் திரவங்களின் புகையால் உழன்றது, அமெரிக்காவில் ஒரு ஆற்றையே தீக்கிரையாக்கியது, காடுகளை அமில மழையால் ஆழ்த்தியது. வெப்பமடைதல் பிரச்சினை நம்மை முற்றும் முழுவதும் பீதியிலாழ்த்தும் வரை நாம் இதற்கு விடை தேடப்போவதில்லை. ஆனால் நின்று, நிதானித்து சரிசெய்துவிடலாம் என்று நம்புவதற்கு இடமில்லாத ஒரு இக்கட்டான சூழலில் இன்று நாம் இருக்கிறோம். காரணம் 350ppm க்கு குறைவாக இருக்க வேண்டிய கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு ஏற்கனவே 385ppm ஆக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால் அது வருடத்திற்கு 2ppm அதிகரித்துக் கொண்டேபோய் தற்போது எஞ்சியுள்ள படிவத் திரவங்கள் (fossil fluids), எண்ணெய், கரி, கச்சாப் பொருட்களான தார்மணல், மீத்தேன் ஹைட்ரேட், கடின எண்னெய்கள் போன்ற எரிபொருள் முழுவதும் எரிவதால் எட்டக்கூடிய 450ppm அளவை விரைவில் அடைந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அல்லது 3.6 fahrenheit குறைப்பதுதான். அப்படி செய்வதன் மூலம் உடனடி நாசத்தை தவிர்க்கலாமே தவிர தீர்வை சென்றடைந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது.

ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வை நிறுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை தொழில் நிறுவன அதிபர்களின் கைக்கூலிகளாக இருக்கும் நமது அரசாங்கங்கள்தான். அதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு அளவிலடங்காதது. துந்திரப் பிரதேச தட்பவெப்ப மண்டலங்கள் ஏற்கனவே துருவங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இது கிட்டத்தட்ட 250 மைல்களை தாண்டிவிட்டது. தெற்கு அமெரிக்கா, பூமத்திய ரேகைப் பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளன. கார்பன்- டை ஆக்ஸைடு வளர்ச்சியை கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வராவிட்டால் காட்டுத்தீயும், ஏரிகள் வரண்டு போவதும் வழமையாகிவிடும். பனிமலைகளிலிருந்து வரும் நல்ல தண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இமயமலை, ஆண்டஸ், ராக்கி மலைத்தொடர்களின் நீராதாரங்கள் வற்றிக் கொண்டு வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எழும் ஹைட்ராலஜிக் சுழலால் வெள்ளங்களும் பஞ்சங்களும் அதிகரிக்கும். ஆழ்கடலிலுள்ள பவழப்பாறைகளும், மழைக்காடுகளும் மூன்றிலொரு பங்கு கடல் வாழ் விலங்கினங்களின் உரைவிடமாக விளங்குகின்றன. கார்பன்- டை ஆக்ஸைடு அதிகரிப்பால் கடல் நீருடன் அமில மழைக்கலப்பு ஏற்பட்டு இவை பழுதடைந்து வருகின்றன.

எங்கெல்லாம் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் கார்பனை தக்கவைத்து பூமிக்குள் திருப்பி அனுப்புவதன் மூலம் புவி வெப்பமடைவதை தவிர்க்கலாம். வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எண்ணெய்களிலிருந்து கார்பனை பிரித்தெடுப்பது கடினம். அதுமட்டுமல்லாது எண்ணெய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொடர்ந்து எரிபொருள் சக்தியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் இனி அது நிலக்கரியிலிருந்து எண்ணையை பிழிந்து எடுப்பதன் மூலமோ, படிவத் திரவங்களின் மூலமோ சாத்தியம் இல்லை. அவற்றின் முடிவை நாம் மிக விரைவில் சென்றடைய இருக்கிறோம். எண்ணெயின் விலை உயர இதுவும் ஒரு முக்கிய காரணம்.
மறு உற்பத்திக்குப் பயன்படக்கூடிய எரிபொருள் சக்தி மூலங்களை கண்டடைவதை விட்டு விட்டு எண்ணெய் நிறுவன ஜாம்பவான்கள் புவி வெப்பமடைவதைப் பற்றின ஐயப்பாட்டினை உண்டாக்குவது “புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு” என்று நமது சிகரட் பெட்டிகளின் மீது விளம்பரப்படுத்துவதை போன்றது. அரசியல் வாதிகளை அவர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்ட நிலையில் மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். கடைசி சொட்டு வரை நிலத்திலிருந்தும், கடலுக்குள்ளுமிருந்து படிவத் திரவத்தைப் பிழிந்தெடுக்கத் துடிக்கும் சுய நலம் பிடித்த இந்த வர்த்தக நிறுவங்களை குடிமக்களாகிய நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு அருகிலேயே நாம் உண்பதற்குத் தேவையான பயிர் விளையும்போதிலும் உலகின் மற்றொரு மூலையிலிருந்து அது கொண்டுவரப்படுகிறது. ரயில் வண்டியைவிடவும் விமானத்தில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிவிட்டது. விமான தளங்கள் நம் வெளியூர் பேருந்து நிலையங்களைக் காட்டிலும் அதிக வாகன நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இது பெரு முதலாளிகளுக்கு எளிதில், மலிவான விலையில் படிவத்திரவங்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான். கார்பன் வரியென்றும் கார்பனுக்கு 100% டிவிடெண்டும் விதிப்போமேயானால் அவர்கள் இப்போதையிலிருந்து தெளிவடைய வாய்ப்புண்டு. அதே நேரம் பொது மக்களாகிய நமக்கு அவர்கள் ஏற்படுத்தி வரும் நாசத்திற்கும் அவர்களை எவ்வாறு ஈடு செய்ய வைப்பதெப்படி என்று தெரியவில்லை.

ஹான்சனின் எச்சரிக்கைகள் இப்படியிருக்க இதனிடையில் கடந்த ஜூன் 22ம் தேதி ஜெடாவில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தியாளர் (Organisation of petroleum exporting companies)- வாடிக்கையாளர் கூட்டத்தில் நடந்த சூடான விவாதத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு காரணம் போதிய அளவு உற்பத்தி நாடுகள் ஏற்றுமதி செய்யாததுதான் என்று வாடிக்கையாளர்களான (பெரும்பாலும்) மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்ட மற்றொரு புறம் உற்பத்தியோ, நுகர்வோ பெரிய மாற்றமடையாதபோது போன வருடம் 70$ ஒரு பேரலாக இருந்த பெட்ரோல் இப்போது 140$ ஆக மாறக் காரணம் என்ன என்று பி.சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார். இந்த சர்ச்சையில் தெரிய வந்தது என்னவென்றால், பெட்ரோலியத்தில் முதலீடு செல்லும் பண முதலைகளுக்கும் அதன் உடனடி பயன்பாட்டுக்கும் எந்த உறவும் கிடையாது. அமெரிக்காவைச் சார்ந்த பெரிய நிதி நிறுவனங்கள், ஓய்வுப் பண வைப்பு நிதி நிறுவனங்கள், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் “எதிர்கால வர்த்தகம்” என்ற பெயரில் பெருவாரியான சரக்கை விலைபேசும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதென்பது ஒரு அசிங்கமான/கசப்பான உண்மை. உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது.

இழவு வீட்டில் பந்தலிலே பாவற்காய் என்று பாடுவது நினைவிற்கு வருகிறதல்லவா?

பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்

Thursday September 23, 2004

நன்றி: திண்ணை

கடந்த செப்டம்பர் 10ம் தேதி திண்ணை இதழில் வெளியான சி.மதிவாணனின் கட்டுரை என்னை எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியமையால், சில எண்ணங்கள்.

பெண்ணை/பெண்ணுடலை கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்புகளுக்குட்படுத்துவதுடன் பெண்ணை தெய்வமாகக் கருதுதல், ஆண்களுக்கு நிகராக மதியாமல் சிறப்பு சலுகைகளும் அங்கீகாரங்களையும் அளித்தல், அழகியல் கட்டுமானங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகப் பெண்ணை பாவித்தல் போன்ற பார்வைகளும்கூட பெண்களை ஒரு சாதாரண தளத்தில் இயங்கவிடாமல் தனிமைப்படுத்துவதற்கான (alienation) ஒரு உத்தியாகவே பார்க்க வேண்டும். ‘உங்களுடைய தங்கத்தாம்பாளங்கள் எங்களுக்கு வேண்டாம். அவற்றினுள் ஒளிந்துகொண்டிருக்கும் தூக்குக்கயிறுகளும் எங்களுக்கு வேண்டாம் ‘ என்பதே பெண்களின் அறைகூவலாக இருக்க முடியும்.

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் தன் வாழ்தலுக்கான சூழல்களையும், வழிமுறைகளையும் கட்டமைத்துக்கொள்வதற்கான வெளி (space) தேவை. ஒருவருக்கான வாழ்முறையை ஒருவர் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பொருளாதார, சுகாதார மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டி சரியாக சுவாசிப்பதற்கான ஒரு சுதந்திரம். மேற்கண்ட விஷயங்களுக்கு ஏற்றவாறு பெண்கள் கற்பு, தாய்மை என்று காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் நியதிகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் பாலியல் விடுதலைகோருவதற்கான சமூகச் சூழல் மட்டுமே ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலியல் சுதந்திரத்துடன் ஒரு விதத்தில் தொடர்புடைய பாலியல் தொழிலை சட்ட விரோதமாக்கி அத்தொழிலாளர்களை காவல்துறையின் ‘பரிபாலனத்திற்கு’ விடுவதும். பாலியல் தொழிலை நோய்   என்று சொல்வதும் தவறு. பாலியல் தொழிலை நோய் எனக்கொண்டால் ஆணாதிக்க   சமூகத்தை ஆலாலவிடமென்றல்லவா சொல்ல வேண்டும் ?

வழமைபோல மேலைநாடுகளை பெண்கள் விஷயத்துக்கு வழிகாட்டிகளாக எடுத்தாள விரும்பாவிட்டாலும் அங்குள்ள பொருளாதார மற்றும் பாலியல் சுதந்திரம் இந்தியாவிலும் மிகவும் தேவை. பாலியல் தொழிலாளர்களின்மீது செலுத்தப்படும் வன்முறையும் பாலியல் தொழிலை மற்ற தொழில்கள்போன்று எண்ணாமல் இழிவுபடுத்தும் கொடுமைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால், பாலியல் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள், அரசியல் வாதிகள், காவல்துறையினர் ஆகியவர்களின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி பாலியல் தொழிலை அரசாங்கம் அங்கீரித்துக் கொள்வதாகத்தான் இருக்கமுடியும். சரியான பாலியற்கல்விமுறை மூலமாகவும் அங்கீகரிக்கப் பட்ட (licensed) தொழில் நடைமுறைகளாலும் மட்டுமே ஏழ்மையாலும் பிறகாரணங்களாலும் இத்தகைய தொழிலுக்கு வரப்பட்ட பெண்கள் நசுக்கப்படுவதையும், பழிக்கப்படுவதையும் தடுத்து அவர்களுக்கான சுயமரியாதையை பராமரித்துக் கொள்ளமுடியும்.

நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களில் தெருப்போஸ்டர்களிலும் தினசரிகளிலும் பாலியல் தொழிலாளர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். இவர்கள் தங்களது தற்காப்புக்காக காவல்துறையை உண்மையாகவே துணைக்கு அழைக்கமுடியும். ஆனால் இந்தியாவிலோ அரசியல்வாதிகளும் காவல்துறையுமே இப்பெண்களை கைப்பாவையாக்குவதற்கான சூழ்நிலை நிலவிகிறது.

ஆதிகாலம் முதல் தொடர்ந்துவரும் இந்த நடப்புகளை திரும்பத்திரும்ப முளைக்கிள்ள முயற்சித்து அந்தச் சிறுபாண்மையினருக்கு கொடுமை இழைப்பதைவிட்டுவிட்டு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் அங்கீகாரமும் செய்து கொடுப்பதன் மூலம் நமக்குள் உடல்கள் குறித்து பதிய வைத்துக் கொண்டிருக்கும்/ பதியம் செய்யப் பட்டிருக்கும் பாரபட்சப் பார்வையை போக்கிக் கொள்ளலாம்.

தேசியம் தேடும் உடலும் அடையாளமும்

கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக இந்த நியூயார்க் நகரின் குளிரின் நடுவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் வேலைகளை நான் கண்காணித்து வருகிறேன். அவ்வப்போது பெய்யும் பனி, பேய்க்காற்று, ரத்தத்தை உறையச் செய்யும் பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலை இவற்றிடையில் தொடந்து தங்களது வேலைகளை துரிதமாக செய்து கொண்டிருக்கும் வேலையாட்களை பார்க்கையில் ஒருபுறம் பரிதாபமும் மறுபுறம் அவர்கள் பயன்படுத்திய தூக்கிகள் போன்ற இயந்திரங்களைக் கண்டு வியப்பும் மேலிட்டது. இரண்டு நாட்களுக்கொரு மாடி என கிட்டத்தட்ட முப்பது நாட்களில் என் கண்முன்னே ஒரு பல அடுக்கு மாடி கட்டப்பட்டுவிட்டது. இன்று காலை தேனீர் அருந்துவதற்கு முன் அதன் முன் சென்று பார்த்தேன் அதன்மேல் ஒரு அமெரிக்கத் தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது.

அடையாளங்களின் உருவாக்கம் என்பது அரசியல், ஆதிக்கவர்க்கத்திலிருந்து உருவாக்கப்படுகிறதென்ற தோற்றம் ஒருபுறம் இருக்கையில் இத்தகைய அடையாளங்களில் தன்னை புகுத்திக்கொள்வதற்கான எத்தனிப்பு சாதாரண மக்களுக்கும், விளிம்புநிலையினருக்கும் ஏற்படுவதென்பதுதான் இதில் உள்ள நகை முரண். கடந்த ஒரு வருட காலமாகவே கட்டிடம் கட்டப்பயன்படுத்தப்படும் தூக்கிகள் பழுதடையும் காரணத்தால் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலானோர் நியூயார்க் நகரத்தில் மட்டுமே விபத்துக்குள்ளாகி உயிர்துறந்துள்ளனர். அவர்களுக்கான தொழிலாளர் அமைப்புக்களில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான வர்க்கங்களிலிருந்து வருபவர்களிடம் குறைந்த சலுகைகளுடன் அதிக வேலைப்பளுவை சுமத்தும் உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. எனினும், தேசியம் என்னும் சக்தியின் ஊடுறுவல் சமூகத்தின் எல்லா நிலைகளையும் சென்றடையக் காரணம் என்ன? இக்காரணங்களால் அவர்கள் துய்க்கும் பலன் யாது?

அடையாளங்களைச் சென்றடைதல் என்பது ஆதிக்கத்தின் பக்கம் செயல்லடுகையில் பல்வேறு இன, சாதி, பால், மொழிக் குழுக்களை ஒரு அடையாளக் குடையின் கீழ் கொண்டு சேர்ப்பதில் விரிகிறது.  மற்றொரு பக்கம் விளிம்புநிலைப் பிரஜைகள், பெண்கள், வேற்று மொழி/இனத்தைச் சார்ந்தவர்களும் இந்த தேசிய அடையாளத்தினுள் புகுவதற்கான எத்தனிப்பையும் தேவையையும் பெருந்தேசிய அடையாளங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.  அதேசமயம் தங்கள் நம்பிக்கைகள், சுய மரியாதை, உரிமைகள், கலாச்சார அடையாளங்கள் போன்றவற்றிற்கு களங்கம் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியங்கள் விளிம்பு நிலையினரைக் கேள்விக்குள்ளாகின்றன.

(தொடரும்)

வரலாறு எழுதுதல்

வரலாறு, வரலாறு எழுதுதல் என்பவை தொன்று தொட்ட காலமாகவே இருந்து வருகின்றனவா? வரலாறு எழுத்து வடிவம் பெறுவதற்கு முன் நமது பேச்சுவழி கலாச்சாரங்களில் இருந்தமை நாட்டாற்கலைகள் மூலமாகவும், கல்வெட்டுக்கள் மூலமாகவும் இதர பல இசை நாடகங்கள், பாடல் மற்றும் ஓவியங்களின் வழி கண்டறியப்படலாம். குகைகளில் வாழ்ந்த காலம் முதலாகவே மனிதன் தனது தினசரி நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் ஆகியவற்றை குகைகளில் தீட்டத்தொடங்கிவிட்டான். அப்படி இருக்கையில் மனிதர்கள் தன் வரலாறு கூறுதல் என்ற அளவிலேயே அது கூறப்படும் மொழி, இடம், காலம், ஊடகம் என்ற அளவில் தான் கூறவந்ததை முற்றிலும் மற்றவர்களுக்கு சென்றடையுமாறு கூறிவிட்டானா என்பதில் ஐயங்கள் பல.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கிய நிகழ்வாக எழுந்த இந்த வரலாறு எழுதுதல் தன் வரலாற்றை மற்றுமல்லாது பிறர் வரலாறுகளையும் நிறுவ முயன்றதுடன் பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற சமூக காரணிகளையும் அவற்றிற்குரிய அளவுகோல்கள் பிறப்பிடங்கள் பற்றி மேற்கத்திய கலாச்சாரங்களுக்கு பாரபட்சமாகவே விரிக்கத்தலைபட்டது அனைவரும் அறிந்த உண்மை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கலாச்சார ரீதியில் முன் தங்கியிருந்த எகிப்தை பின்னோக்கி தள்ளிவிட்டு கிரேக்கத்தை உலகக் கலாச்சார மையெமென நிறுவியது மேற்கத்திய வரலாற்றின் சாதனை வரலாற்றியலாளர் மார்டின் பெர்னல் தனது கறுப்பு எதீனா என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். கலையின் கதை என்ற மிகவும் பிரபலமான தனது நூலில் காந்தாரக் கலைக்கு அரை பக்கம் ஒதுக்கிய ஈ.ஹெச். காம்ப்ரிச் இந்தியக் கலைமரபைப் பற்றி அதில் ஒன்றுமே குறிப்பிடுவதில்லை. ஆனால், இந்நூல் இன்று வரை உலகக் கலை வரலாற்றைப் பறைசாற்றுகின்ற நூலாக எல்லா பல்கலைக்கழகங்களிலும் படிக்கப்பட்டு வருகிறது.

அறிவுத்துறையை கையிலெடுத்திருக்கும் இன்றைய நவீன நிறுவனமான கல்வித்துறையின் அணுகுமுறைகளை கட்டுடைப்பு செய்தவர் தத்துவ ஞானி மிசேல் ஃபூக்கோ. அறிவுத்துறையை பல்வேறு பகுதிகளாக (உ.தா: வரலாறு, மருத்துவம், இலக்கியம், மானுடவியல், பொருளாதாரம், அரசியல்) பிரிப்பதையே பிரச்சினையாகப் பார்க்கிறார் அவர். தனது “பொருட்களின் அமைவு” (Order of things) என்ற புத்தகத்தில் போர்கேசை மேற்கோள் காட்டி ஒரு சீனப் பொருளடக்கத்தில் ஒன்றுபோலிருப்பதையும் வேறுபட்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தவிப்பில் ஏற்படுத்தப்பட்ட வகைப்படுத்தலை அவர் சுட்டிக்காட்டுகிறார்:விலங்குகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:அ) அரசருக்குச் சொந்தமானவை, ஆ) இறந்தபின் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டியவை, இ) பயந்தவை, ஈ) பன்றிகள், உ) மாலுமிகளை தங்கள் பாடல்களால் திசை திருப்பும் பாதி மனித இனம், ஊ) அற்புதமானவை, எ) தெரு நாய்கள், ஏ) இந்த வகைப்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளவை, ஐ) மிகவும் உணர்ச்சி வசப்படுபவை, ஒ) எண்ணிலடங்காதவை, ஓ) ஒட்டகங்களின் அருமையான நுண்ணிய முடிகளால் வரையப்பட்டவை, ஒள) மற்றும் பல, ஃ) சமீபத்தில் தண்ணீர் குடுவையை உடைத்தவை, அ அ) ஈக்களிலிருந்து மிகவும் மாறுபட்டவை. இந்த வகைப்படுத்தலின் விசித்திரம் என்னவென்றால் முற்றிலும் மற்றொரு சிந்தனை முறைக்குறிய புனைவுகளைக் கொண்ட இவை நமது புரிதலுக்கு மிகவும் அப்பாற்பட்டு இருப்பதுதான்.

(தொடரும்)